தம்பி மனைவி மீது "வெறி"... செல்போன் டவரில் ஏறி மிரட்டிய "சைக்கோ".. தவறி விழுந்ததால் பரபரப்பு
சிவகங்கை: காரைக்குடியில் மது போதையில் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு முருகன், ஜெயச்சந்திரன் என இரண்டு மகன்கள்.
இவர்களில் ஜெயச்சந்திரன் மும்தாஜ் என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். ஆனால், ஜெயச்சந்திரனின் குடிப்பழக்கத்தால் மும்தாஜ் அவரைப் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தம்பி மனைவி மும்தாஜ் மீது, ஜெயச்சந்திரனின் அண்ணன் முருகனுக்கு ஒருதலைக் காதல் ஏற்பட்டது. எனவே, தம்பி மனைவியை சேர்த்து வைக்கக்கோரி, 60 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் முருகன்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தார் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அந்தரத்திலேயே சாகசங்கள் செய்து காட்டி, அவர்களை மிரளச் செய்தார் முருகன். கம்பி வழுக்கியதில் தவறி விழுந்த முருகன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் ஒருவழியாக கீழே இறங்க சம்மதித்த முருகன், செங்கல்கற்களை தலையில் அடித்துக் கொண்டு புலம்பினார்.
தரையை நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த முருகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவங்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செல்போன் கோபுரத்தில் ஏறிய முருகன் மது போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.