சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் கவலைக்கிடம்
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது விஸ்வநத்தம். இங்கு சிவகாசியை சேர்ந்த அசோகன் என்பவருக்குச் சொந்தமான "கணேஷ்குமார் பயர் ஒர்க்ஸ்" உள்ளது.
40க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. இங்குள்ள ஒரு அறையில் நேற்று மதியம் 12.45 மணிக்கு தொழிலாளர்கள் நான்கு பேர் பேன்சி ரக பட்டாசிற்கான மணி மருந்தை செலுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் லட்சுமியாபுரம் நாகராஜ், வெள்ளைச்சாமி, அசோக்குமார், கான்சாபுரம் முத்துச்சாமி ஆகியோர் காயமடைந்தனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் நாகராஜ் 85 சதவீதம், வெள்ளைச்சாமி நுாறு சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் இருவரையும் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.