ஹெல்மெட் அணியாமல் சென்ற 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.. நெல்லை எஸ்.பி. அதிரடி உத்தரவு
நெல்லையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 6 போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை: ஹெல்மேட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒரு பெண் போலீஸ் உள்பட 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட எஸ்.பி. பொறுப்பு அருண்சக்திகுமார் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல நகரங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களை போலீசார் விரட்டி, விரட்டி போலீசார் பிடிக்கின்றனர்.
ஆனால் அவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதை நாம் பார்க்க முடியாது. சட்டத்தை அமல்படுத்தும் போலீசாரே ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை பிடிக்கலாமா? என வாகன ஓட்டிகள் புலம்பி வந்தனர்.
இந்நிலையில் உடன்குடி பகுதியில், போலீசார் சிலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக மாவட்ட எஸ்.பி.க்கு புகார் சென்றது. இதனால் இன்று திருநெல்வேலி எஸ்.பி பொறுப்பு வகிக்கும் ஏ.எஸ்.பி., அருண்சக்திகுமார், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய ஒருபெண் போலீஸ் உட்பட 6 பேரை தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். எஸ்.பி.யின் இந்த உத்தரவு போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.