ஆதார் கார்டு, போன் நம்பரால் சிக்கல்... மே இறுதிக்குள் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு கிடைக்காது?
ஆதார் கார்டு, செல்போன் நம்பர் ஆகியவற்றை பெறுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு அறிவித்தது போல் மே மாத இறுதிக்குள் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு கிடைப்பது சந்தேகம்தான்
சென்னை: தமிழக அரசு உறுதி அளித்ததுபோல் வரும் மே மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் கிடைப்பது என்பது சந்தேகமே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2005-ஆம் ஆண்டு புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. அதாவது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு தற்போது அக்கு வேறு ஆணி வேறாக உள்ளது.
இதனால் ஒவ்வொரு ஆண்டு முடியும் போது ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணிக்கு பொதுமக்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஸ்மார்ட் கார்டுகள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில்...
தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 840 ரேஷன் கடைகள் உள்ளன. ஒரு வழியாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. அதில் ஆதார் எண், செல்போன் எண், உறுப்பினர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி ஏப்ரல் ,மே மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கடந்த 1-ஆம் தேதி தொடக்கம்
இந்நிலையில் சென்னையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை வைத்து ஸ்மார்ட் கார்டை ஆக்டிவேட் செய்து, பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குளறுபடி
இந்நிலையில் பொதுமக்களிடம் ஆதார், செல்போன் உள்ளிட்ட விவரங்களை சரிவர வாங்காத காரணத்தால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவரின் பெயர், ஆதார் எண், செல்போன் ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் சென்றடையும். ஆனால், பெரும்பாலானோர் சரிவர விவரங்கள் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஏற்பட்ட குளறுபடிகளால் தாமதாகும் நிலை உள்ளது.
மே மாதம் இறுதியிலும் இல்லை
செல்போன் எண்கள் தவறாக கொடுக்கப்பட்டதால் இந்த திட்டம தொடங்கப்பட்டு 15 தினங்கள் ஆகியும் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 15 சதவீதம் பணிகளே நிகழ்ந்துள்ளது. மேற்கண்ட குளறுபடிகளால் மீதமுள்ள 85 சதவீதம் கார்டுகள் இதுவரை தயார் செய்யப்படவில்லை. இதனால் அரசு அறிவித்தப்படி மே மாதம இறுதிக்குள்ளும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.