காவிரிப் படுகை வறண்டு போகத்தான் தடுத்து நிறுத்தப்பட்டதா காவிரி நீர்? #kathiramangalam
சென்னை: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயுவை எடுக்கும் பணியை போலீஸ் பாதுகாப்புடன் நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டத்திற்கு எந்த பலனும் கிடைக்காமல் போய் விட்டது. இந்த நிலையில் இந்தத் திட்டம் தொடர்பாக பல்வேறு விதமான சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.
மக்கள் மத்தியில் இந்தத் திட்டத்தால் பாதிப்பு வரும் என்பது மட்டுமே தெரிந்துள்ளதே தவிர டெக்னிக்கலாக உள்ள பல விஷயங்கள் மக்கள் மத்தியில் இன்னும் போகவில்லை அல்லது அவர்களுக்கு அது விளக்கப்படவில்லை.
ஒரு பக்கம் நெடுவாசல் மக்கள் தவித்து வருகின்றனர். மறுபக்கம் கதிராமங்கலத்தில் திட்டத்தையே அமல்படுத்த ஆரம்பித்து விட்டனர். நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகள் கடலோர தமிழகத்தில் குவியப் போகிறது. இந்த நிலையில் சில கேள்விகள் எழுந்துள்ளன.
பல வருட ஆய்வு தேவை
எந்த ஒரு இடத்திலும் புதியதோர் திட்டத்தினை செயல்படுத்தும் முன்பாக, பல வருடங்களுக்கு முன்பிருந்தே அந்த திட்டத்திற்கான ஆய்வுகள், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வு மையங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டு, அவற்றின் முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னரே திட்ட வடிவம் பெறும்.
ஆய்வக அறிக்கை
அதன் பின்னர், அத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல, என்.ஓ.சி. க்காக, அத்திட்டத்தை அந்தப்பகுதியில் நிறைவேற்றினால், அந்த குறிப்பிட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களுக்கு (மண் வளம், நீர் வளம், காற்று) அத்திட்டத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற ஆய்வையும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆய்விடத்திலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம்
இவை திட்ட ஒப்புதலுக்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். அங்கு, அதற்கென்று நியமிக்கப்பட்ட ஒரு குழு, அந்த E.I.A. ரிப்போர்ட் எனப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய அறிக்கையினை (Environmental Impact assessment) பரிசீலித்து, ஒரு clearance certificate தர வேண்டும். அதன் பின்னரே, அத்திட்டம் அடுத்த நிலைக்கு அதாவது திட்ட நிறைவேற்றல், (குழாய் பதிப்பு போன்ற அடுத்தகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்).
இன்னொரு திட்டமும் முக்கியம்
இதுபோன்ற மிகப் பெரிய திட்டங்களை முன்னெடுக்கும் போது, சுற்றுச்சூழல் நிர்வாக திட்டம் (Environmental management plan) திட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் வழக்கமான நடைமுறைகள் ஆகும்.
மக்களிடம் நிலவும் கேள்விகள்
தற்போது நெடுவாசல், கதிராமங்கலம் தொடர்பாக மக்களிடம் இதுதொடர்பான கேள்விகள் எழுகின்றன. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் இந்த பிரச்சினைக்குரிய திட்டங்களுக்கான ஆய்வுகள் யாரால், எப்போது, எந்த நிறுவனங்களால், ஆய்வு மையங்களால் மேற்கொள்ளப்பட்டன? திட்ட ஆய்வுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது?
ஆய்வறிக்கை நகல்களை காண்பிக்க வேண்டும்
இதுதொடர்பான அந்த ஆய்வறிக்கைகள் நகல்கள் காண்பிக்கப்பட்ட வேண்டும் இஐஏ மற்றும் இஎம்பி அறிக்கை நகல்கள் காண்பிக்கப்பட்ட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாது என்று எந்த குழு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குழுவில் யார் யார்
அந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் யார் யார்? எந்தெந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள்? அவர்கள் அந்நிறுவனத்தின் எந்தப்பதவியில் இருக்கிறார்கள்? அந்த குழுவில் இடம் பெற்றவர்கள் யாருக்கேனும் துவக்ககால ஆய்வுப்பணிகளோ, சுற்று சூழல் ஆய்வு பற்றிய திட்டமோ, (கன்சல்டன்சி) இஎம்பி சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் (மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம்/மத்திய புவி அறிவியல் அமைச்சகம்/மத்திய நீராதார அமைச்சகம்/திட்டத்தை நிறைவேற்றும் ஜெம் லேபரட்டரீஸ் ஆகியவற்றின் ஆலோசனை வழங்கப்பட்டதா? என்பது தெளிவுபடுத்த வேண்டும்.
20 ஆண்டுகளில் ஆய்வு நடத்தியது யார்?
காவிரி ஆற்றுப்படுகையில் மீத்தேன் வாயு / ஹைட்ரோகார்பன் பற்றிய சோதனைகளை கடந்த இருபதாண்டுகளில் யாரெல்லாம் மேற்கொண்டார்கள்? இந்த ஆய்வுகளை நடத்தும் உரிமை மேற்கண்ட அமைச்சகங்களால் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டது? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
வேண்டும் என்றே தடுக்கப்பட்டதா காவிரி நீர்?
இந்தத் திட்டங்களை மனதில் கொண்டுதான், காவிரி படுகை வறண்டு போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான், காவிரி நீரை கொடுக்க விடாமல் தடுத்து நாடகம் போடப்பட்டதா? என்ற மிகப் பெரிய கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்தத் திட்ட ஆய்வுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள்
தமிழ்நாட்டின் பெருமைமிக்க நெற்களஞ்சியம், "சோழநாடு சோறுடைத்து" என்பது முன்னோர் கூற்று, இனிவரும் காலத்தில் இது அழிந்து போய் பாலைவனமாகி விடாமல் எப்பாடு பட்டாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கவலையிலும், கட்டாயத்திலும் தமிழக மக்கள் உள்ளனர்.