குறைந்த விலை நாப்கின் தயாரித்து சாதனை.. பெண்கள் பாராட்டும் நாயகர் அருணாச்சலம் முருகானந்தம்
மாதவிலக்கு சமயங்களில், ஏழைப் பெண்களின் கவலையைப் போக்க, குறைந்த விலையில், நாப்கின்களை தயாரித்து வழங்கும் மெஷின் கண்டு பிடித்து பெண்கள் சமுதாயத்துக்கு அர்ப்பணித்தtவர் சாதனையாளர் அருணாச்சலம் முருகானந்தம்
சென்னை: மாதவிலக்கு நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம். இவரை 70வது சுதந்திர தின நாளில் நினைத்துப் பெருமை கொள்வது பொருத்தமான ஒன்று.
அருணாச்சலம் முருகானந்தம் சாதனையைப் பாராட்டிய மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்து கெளரவித்துள்ளது. பல்வேறு சமூக நல அமைப்புகள் பாராட்டுக்களை தினமும் அளித்து வருகிறது.
கோவை மாவட்டம் கிராமப் பகுதிகளில் ஏழைப் பெண்களின் மாதாந்திர பிரச்சனையை, சமூக நோக்கில், மிகக்குறைந்த விலையில் சமாளிக்க கற்றுக் கொடுத்த அருணாச்சலம் முருகானந்தம் உலக மக்களின் பாராட்டுக்களை பெற்ற வண்ணம் இருக்கிறார்.
எளிதில் கிடைக்காத கௌரவம், நாம் அறிந்திராத மாமனிதர்களுக்குக் கிடைக்கும் சமயங்களில், அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால், அதைக் கொண்டாடத் தவறி விடுகிறோம். அந்த வகையில் அருணாச்சலம் முருகானந்தம் சாதனையும் முக்கியத்துவமும் சமூகத்தின் கண்களில் இன்னமும் முழுமையாகப் படவில்லையோ என்று தோன்றுகிறது.
பத்மஸ்ரீ விருது
கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஒப்பற்ற தமிழர் அருணாச்சலம் முருகானந்தம். விருதுக்குப் பின்னரே அவர் இந்தியாவின் கவனிப்பைப் பெற்றார். ஊடக கவனிப்பும் அப்போதுதான் கிடைத்தது.
60% பெண்களுக்கு நாப்கின் வசதி இல்லை
இந்தியாவில் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்கும் வசதியின்றி வாழும் அவலம் நிலவுகிறது. இந்நிலையைப் போக்க முயன்ற முருகானந்தம், தன் பல ஆண்டுக்கால விடாத முயற்சியால், பிரத்யகே இயந்திரம் தயாரித்து, அதன்மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார்.
இரண்டு ரூபாய்க்கு நாப்கின்
பன்னாட்டு நிறுவனங்களால் அதிக விலையில் விற்கப்படும் பெண்களுக்கான நாப்கின்களை, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என கற்பனைக் கெட்டாத விலையில், சுகாதாரமாகத் தயார் செய்து, சேவை உள்ளத்துடன் அவற்றை விற்பனை செய்தார் அருணாச்சலம் முருகானந்தம்.
உலக மகளிருக்கும் அர்ப்பணம்
உலகம் முழுக்க மகளிர் அமைப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு தமது இயந்திரங்களை வழங்கி உற்பத்தி முறைகளையும் கற்றுத்த தந்துள்ளார். இவரது முயற்சியால் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாகும் நாப்கின்களை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உலகின் சக்தி வாய்ந்த நபர்
உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை, கடந்த 2014ம் ஆண்டு தேர்வு செய்து உலகிற்கு அடையாளப்படுத்தியது. அதன் பிறகே அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை, இனங்கண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்துக் கௌரவப்படுத்தியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வாழ்த்தும் ஆண்
ஏழைப் பெண்களின் மனதை, தாயுள்ளத்தோடு அறிந்து அவர்களின் மாதாந்திர பிரச்சனையை போக்கும் வகையில் செயல்பட்டு வரும் அருணாச்சலம் முருகானந்தம், பெண்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்.