டாஸ்மாக் எதிர்ப்பு பந்த்.. பார்கள் மூடல்.. சாலையோரம் உட்கார்ந்து குடிக்கும் குடிகாரர்கள்
சென்னை: தமிழகத்தில் இன்று நடந்து வரும் டாஸ்மாக் எதிர்ப்பு பந்த்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பார்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிகாரர்கள் மதுவை வாங்கி சாலையோரமாக உட்கார்ந்து குடிக்கும் காட்சிகளும் ஆங்காங்கே நடந்தேறி வருகிறது.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இந்த பந்த்துக்கு தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த பந்த் காலை முதல் தொடங்கியுள்ளது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் பந்த்துக்கு ஆதரவு இல்லை. பதட்டமான பகுதிகளில் மட்டுமே கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் மதுக் கடைகளை முன்னெச்சரிக்கையாக மூடியுள்ளனர். பார்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் திறந்துள்ள கடைகளில் சரக்கு வாங்கியோர் குடிக்க இடம் இல்லாமல் சாலையோரமாக, கடைக்கு முன்பாக நின்றபடி என குடித்து விட்டுச் செல்கின்றனர். இதனால் அந்தப் பாதை வழியாக செல்வோர் பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் 2 கேரள பேருந்துகள் உள்பட சில பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட முக்கால்வாசிக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.