மாமனார், மாமியார், மனைவிக்கு சரமாரி அடி.. மாமியார் மண்டை உடைந்தது.. மருமகன் தற்கொலை!
சென்னை: சென்னையில் கோவத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் வெங்கடமங்கலத்தை சேர்ந்தவர் சாமிதுரை கொத்தனார். இவரது மனைவி அம்பிகா.
சாமிதுரையின் வீடு அருகே அம்பிகாவின் பெற்றோர் வீடு உள்ளது. சாமிதுரைக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று இரவு அவர் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.
இதனை அம்பிகாவின் பெற்றோர் கண்டித்தனர். ஆத்திரம் அடைந்த சாமிதுரை உருட்டு கட்டையால் மாமனார், மாமியார், மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் மாமியாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சாமிதுரையை போலீசில் பிடித்துக்கொடுக்க வேண்டும் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்து வந்தனர். இரவில் வீட்டிற்கு வந்த சாமிதுரை வெளியில் சென்று தூங்குவதாக மனைவியிடம் கூறி புடவையை எடுத்துச்சென்றார்.
தன்னை போலீசில் பிடித்துக்கொடுத்து விடுவார்களோ என்று பயந்த அவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.