தலை தீபாவளி கொண்டாட வந்த புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலி!: மாமனாரும் மரணம்
ராமேஸ்வரம்: தலை தீபாவளி கொண்டாட வந்த புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மாமனாருடன் பரிதாபமாக பலியானார்.
ராமேஸ்வரம் மார்கெட் தெருவில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் இங்குள்ள மார்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகளுக்கும், முருகன் என்பவருக்கும் கடந்த ஜுலை மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து, தலை தீபாவளிக்காக முருகன், மாமனார் சிதம்பரத்தின் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு சிதம்பரமும், முருகனும் ஜவுளி மற்றும் வெடிகள் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், அவர்கள் வீட்டிற்கு அருகில் தேங்கியிருந்த மழை நீரில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை கவனிக்காத முருகன், மழை நீரில் கால் வைக்க அவரை மின்சாரம் தாக்கியது. இதில், தடுமாறி கீழே விழுந்த முருகனை தூக்குவதற்காக சென்ற சிதம்பரத்தையும் மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலினை தொடர்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மழைநீரில் மின்சாரம் தாக்கி பலியான சிதம்பரம் மற்றும் முருகனின் உடல்கள் மீட்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் கோயில் காவல் நிலைய போலீஸார், மின்சாரம் தாக்கி பலியான இருவரது உடலையும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தலைதீபாவளி கொண்டாட மாமனார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.