ஸ்டாலின் ஒரு துளசி செடி, இணைப்புப் பாலம்... ஜெகத்ரட்சகன் புகழாரம்!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி புதிய பாடல் கேசட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், ஸ்டாலினைப் பாராட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபுவும், இளைஞர் அணி அசன் முகமது அலி ஜின்னாவும் புதிய பாடல் சி.டி. ஒன்றைத் தயார் செய்துள்ளனர்.
கவிஞர்கள் பா.விஜய், விவேகா, பழனி பாரதி, யுகபாரதி, நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு தாஜ்னூர் இசையமைத்துள்ளார். இந்த பாடல் சி.டி. வெளியீட்டு விழா மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.
இந்த சிடி வெளியீட்டு நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், தமிழச்சி தங்க பாண்டியன், பா.விஜய், விவேகா, பொற்கோ, முன்னாள் அமைச்சர் தென்னவன் செங்கை சிவம், காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், ஸ்டாலின் குறித்த பாடல் சி.டி.யை ஜெகத்ரட்சகன் வெளியிட நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் ஜெகத்ரட்சகன் பேசியதாவது :-
பி.கே.சேகர்பாபு, நெஞ்சில் முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார். மாநாடு போல் பெரும் கூட்டம் சேர்த்து இந்த விழாவை நடத்துகிறார். மு.க.ஸ்டாலின் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பக்கூடியவர். அவர் ஒரு துளசி செடி. 8 கோடி தமிழர்களை இணைக்கும் பாலமாக செயல்படுகிறார்'' என்றார்.
சுப.வீரபாண்டியன் பேசும்போது, ‘‘மிசா கொடுமைகளை சந்தித்தவர் ஸ்டாலின். சிங்கார சென்னையை உருவாக்கினார். மேம்பாலங்கள் கட்டி போக்குவரத்து நெரிசலை தீர்த்தார்'' என்றார்.
விழாவில் ஏகப்பன், மணி வேலன், ஆசாத், விஜயகுமார், புனிதவதி, தேவஜவகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பி.கே.சேகர் பாபு செய்திருந்தார்.