"வருவான்டி, தருவான்டி மலையாண்டி" புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்!
பிரபல ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
சென்னை: சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. பெசன்ட்நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தில் பிறந்த சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி பாடிய பக்தி பாடல்கள் மிக பிரபலம். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய கந்த சஷ்டி கவசம் முருக பக்தர்களால் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.
கந்த சஷ்டி கவசம் பக்திப் பாடலை இணைந்து பாடியவர்கள், சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி. சினிமா படங்களில் பல பக்திப் பாடல்களை இணைந்து பாடியுள்ள அவர்கள், பிறகு தனித்தனியாகவும் பாடியிருக்கின்றனர்.
'தெய்வம் படத்தில் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி இணைந்து பாடிய, 'வருவான்டி தருவான்டி மலையாண்டி பாடல் மிகவும் பிரபலம்.
ஜெயலட்சுமி, சென்னையில் வசித்து வந்தார். கடந்த 1ம் தேதி வீட்டிலுள்ள பாத்ரூமில் தவறி விழுந்த அவரை, உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். சில தினங்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. உறவினர்கள், கர்நாடக பாடகர்களின் அஞ்சலிக்குப் பின்னர் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. சகோதரிகளில் மூத்தவர் ராஜலட்சுமி தனது 53வது வயதில் 1992ம் ஆண்டில் காலமாகிவிட்டார்.
சூலமங்கலம் சகோதரிகள் மறைந்தாலும் அவர்கள் பாடிய முருகன் பக்திப்பாடல்கள் உலகம் உள்ளவரை ஆலயங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும்.