நான் பீட்டா உறுப்பினர் அல்ல... பதறியடித்து டுவீட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த்
நான் பீட்டா உறுப்பினர் இல்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பீட்டா உறுப்பினர் என பரவும் தகவல் தவறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தான் பீட்டா உறுப்பினர் இல்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவீட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
அண்மையில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை திரிஷாவுக்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. இதையடுத்து அவர் டுவீட்டர் பக்கத்தில் இருந்தே வெளியேறினார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, பீட்டாவில் உறுப்பினராக உள்ளார் என தகவல் பரவியது. இதனால் பதறிய சவுந்தர்யா ரஜினிகாந்த் தான் பீட்டா உறுப்பினர் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவீட்டரில் விளக்கம் அளித்துள்ள அவர், ''தான் பீட்டா மெம்பர் என நினைத்திருப்பவர்களுக்கு அது தவறு என தெளிவுபடுத்துகிறேன். தன்னுடைய ஆதரவு முழுவதும் ஜல்லிக்கட்டுக்குதான்'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.