ஜில்லுன்னு பெய்யப்போகுது தென்மேற்கு பருவமழை... நல்ல செய்தி சொன்ன வானிலை
கேரளாவிலும் தமிழகத்திலும் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகம் புதுவையில் மேல் அடுக்கு சுழற்சியால் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை காலங்களில் மழை கிடைக்கும். கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை இரண்டும் ஏமாற்றி விட்டது. தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடுகிறது. நீர் நிலைகள் முற்றிலும் வற்றி வறண்டு விட்டன.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வெயில் கொளுத்துகிறது. தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி கோயில்களில் யாகங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், கோடைகாலத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்து வருகிறது.
கோடை மழை
மார்ச் முதல் மே மாதம் வரை கோடைகாலத்தில் 19 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 11 செ.மீ தான் பெய்திருக்கிறது. வெப்ப சலனம் காரணமாக இன்னும் சில நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலாச்சந்திரன் கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வுநிலை
தமிழகம் புதுவையில் மேல் அடுக்கு சுழற்சியால் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.
குமரி கடல் பகுதியில் மழை
இதன் காரணமாக குமரி கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இது மேலும் பரவி கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஓரிரு நாளில் தொடங்குகிறது.
பலத்த மழைக்கு வாய்ப்பு
நாளை காலை 8.30 மணி முதல் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் லட்சத்தீவு மற்றும் வடக்கு, தெற்கு கர்நாடகம் , கர்நாடக கடற்கரை பகுதியில் 30ஆம்தேதி முதல் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பரவலாக மழை பெய்யும்
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு முன்னதாகவே பருவமழை தொடங்குகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில்தான் அதிக அளவு மழை பெய்யும். கேரளாவை ஓட்டி இருக்கும் தேனி, கன்னியாகுமரி,நெல்லை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.