ஜல்லிக்கட்டு புரட்சி- மதுரையில் 2-வது நாளாக ஷிப்ட் போட்டு ரயில்கள் சிறைபிடிப்பு! 11 ரயில்கள் ரத்து!
ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் மதுரையில் 2-வது நாளாக ஷிப்ட் போட்டு ரயில்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். இதனால் 11 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை: ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் மதுரையில் 2-வது நாளாக ரயில்களை ஷிப்ட் முறையில் சிறைபிடித்து வைத்துள்ளனர். இதனால் மதுரை வழியாக செல்லும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவசர சட்டம் கொண்டுவர முடியாது என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதையடுத்து மதுரையில் அமைதி அறவழியில் போராடிய இளைஞர்கள் ஆவேசமடைந்தனர்.
மதுரை வைகை ஆற்றுப் பாலத்தில் கோவை பாசஞ்சர் ரயிலை சிறைபிடித்தனர். இரவிலும் ஷிப்ட் போட்டு ரயிலை சிறைபிடித்து வந்தனர். இதேபோல் மதுரை ரயில் நிலையத்துக்குள் வரும் இருபுறங்களிலும் ரயில்களை சிறைபிடித்தனர் புரட்சியாளர்கள்.
இதையடுத்து மதுரைக்கான ரயில் சேவை நேற்று முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இன்று 2-வது நாளாக ரயில்கள் சிறைபிடிப்பு தொடருகிறது. இதனால் மதுரை வழியாக செல்லும் 11 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. இதேபோல் நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்களும் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, திருச்சி, கரூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.