பாம்பனில் ரூ. 20 கோடியில் புதிய தூக்குப்பாலம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
ராமேஸ்வரம்: பாம்பனில் 20 கோடி மதிப்பில் புதிய தூக்குப்பாலம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொறியாளர் சுயம்பு லிங்கம் தெரிவித்துள்ளார்.
மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரயில்வே பாலத்தை தெற்கு ரயில்வே பாலங்களின் தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூக்குப்பாலத்தையும் அதன் உறுதி தன்மையையும் ஆய்வு செய்த அவர், ''பாம்பன் ரயில்வே பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு பதிலாக புதிய தூக்குப்பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ள தூக்குப்பாலம் கப்பல்களோ, படகுகளோ கடந்து செல்லும்போது 16 பேர் கொண்ட மனித சக்தியால் தூக்கப்பட்டு மூடப்பட்டு வருகிறது.
பாம்பன் பாலத்தை அகல பாதையாக மாற்றியபோது தூக்குப்பாலத்தின் எடையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கப்பல்கள் கடக்க வரும் போது தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதில் அதிக சிரமம் இருந்து வருகிறது.
ஆகவே மனித சக்தியால் திறந்து மூடும் வகையில் செயல்பட்டு வரும் தூக்குப் பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் மின் மோட்டார் மூலம் பட்டனை தட்டியவுடன் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப் பாலம் கட்டுவதற்கு ரயில்வே ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
புதிய ரயில்வே தூக்குப் பாலம் கட்டுவதற்கு ரயில்வே பட்ஜெட்டில் ரூபாய் 20 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. வருகின்ற 2016 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் புதிய தூக்குப்பாலம் கட்டும் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தூக்குப்பாலம் கட்டுவதற்கு 4 மாதிரி வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி குழுவினர் பாம்பன் தூக்குப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து கொடுக்கும் அறிக்கையை வைத்து புதிய தூக்குப்பாலம் எந்த வடிவமைப்பு என்பது தெரிய வரும். தற்போது பாம்பன் ரயில்வே பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.