சசிகலா புஷ்பாவை கைது செய்தால் நடக்கப் போவது என்ன? மேலிடத்துக்கு போன ஷாக் ரிப்போர்ட்
சென்னை: சர்ச்சைக்குரிய ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மட்டுமின்றி சில மாவட்ட செயலர்களும் அணி திரட்டப்படுவதாக அதிர்ச்சி தகவலை மேலிடத்துக்கு உளவுத்துறை அனுப்பியுள்ளதாம்.
ஜெயலலிதா அடித்ததாக ராஜ்யசபாவில் புகார் தெரிவித்தவர் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது வழக்குகள் போடப்பட வரும் திங்களன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக இருக்கிறார்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 எம்.பி.க்களை அவரை இயக்கும் தென்மாவட்ட தொழிலதிபர் வளைத்துப் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பெரும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்ட செயலர்களையும் இந்த குரூப் வளைத்துவிட்டதாம். அத்துடன் குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் தற்போது அந்த தொழிலதிபரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனராம்.
தமிழகம் வரும் சசிகலா புஷ்பாவுக்கு நெருக்கடி கொடுத்து அவரை சிறைக்கு அனுப்பினால் இந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலர்கள் ஒவ்வொருவராக களமிறக்கப்பட்டு விஸ்வரூபமெடுக்கும் என்ற அறிக்கை மேலிடத்துக்கு உளவுத்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்..