ஜெயலலிதா நிச்சயம் விடுதலையாகி வருவார்.. செளகார் ஜானகி நம்பிக்கை
பொள்ளாச்சி: தன் மீதான வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் விடுதலையாகி வருவார் என்று பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் நடிகை செளகார் ஜானகியின் 83-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, கொடுக்கப்பட்ட தண்டனை மிக அதிகமானது. வருமான வரி தொடர்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு, அவர் தற்போது அபராதம் செலுத்தி விட்டதாக செய்திகள் வந்துள்ளன.
எனவே அவர் தண்டனையில் இருந்து விரைவில் வெளியே வருவார். தமிழகத்தில் அவர் மிகச்சிறந்த நிர்வாகியாக இருந்தார்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைக் குறைக்க வலிமையான சட்டங்களும், தண்டனைகளும் தேவை. பெண்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு குறித்து விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.
ஆடை என்பது அவரவர் உரிமை. ஒரு பெண்ணின் ஆடை கட்டுப்பாட்டில் பெற்றோரைத் தவிர யாரும் தலையிட முடியாது என்றார் செளகார் ஜானகி.