தமிழக மாணவர்கள் தயாரித்த பலூன் செயற்கைகோள்.... ஆக.24-இல் விண்ணில் ஏவுகிறது நாசா
தமிழக மாணவர்கள் தயாரித்த பலூன் செயற்கைகோள் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நாசா விண்ணில் செலுத்துகிறது.
சென்னை: சிறிய செயற்கைகோளை தயாரித்த தமிழக மாணவர்கள் குழுவினர் தற்போது புதிதாக உருவாக்கிய பலூன் செயற்கைகோளை ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் செலுத்துகிறது.
ரஷ்யாவில் மட்டுமே செயல்படுத்தப்படும் ஸ்பேஸ் டூரிஸத்தை இந்தியாவிலும் ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்பேஸ் கிட்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள மாணவர்கள் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையின் இளம் விஞ்ஞானியான ரிபாஃத் ஷாரூக் என்ற மாணவர் 64 கிராம் எடைக் கொண்ட செயற்கைகோளை கண்டறிந்தார். அது கடந்த மாதம் நாசா விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், விண்ணுக்கு மனிதனின் டிஎன்ஏ மாதிரியை அனுப்பவுள்ளோம். அதன் மூலம் மனித உடல் எந்த அளவுக்கு அந்த இடத்தில் தாங்கும் சக்தியை கொண்டிருக்கும் என்பதை கண்டறிய உள்ளோம்.
இதேபோல் விண்வெளியில் பிரிண்டிங் செய்வது சாத்தியமா என்பதை கண்டறிய என்எஸ்எல்வி கலாம் 2 என்ற பலூன் செயற்கைகோளை உருவாக்கியுள்ளோம். அதில் பிரிண்டருடன் 50 பக்கங்கள் கொண்ட பேப்பரையும் வைத்துள்ளோம். அதற்கேற்ற வாறு செயற்கைகோளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அந்த செயற்கைகோள் விண்ணுக்கு சென்றவுடன் அப்துல் கலாமின் உருவத்தை பிரிண்டிங் செய்து அனுப்பும். கலாமின் 2-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த முயற்சி எடுத்துள்ளோம். இதை வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நாசா விண்ணில் செலுத்துகிறது.
இதன் மூலம் எடுக்கப்படும் கலாம் படங்களை அவர் குறித்த சுயவிவரங்களை எழுதி பைண்டிங் செய்து ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்றனர்.