அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம்.. உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்தார்.
சட்டசபையில் உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் பேசுகையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.
உயர் கல்வி மன்றம் சார்பில் 5 தனிச்சிறப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் வகுக்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியல் மற்றும் உயிரி தொழிநுட்ப மையம் அமைக்கப்படும்.
இதேபோல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய உயர்கல்வி திட்டத்தின் நிதியுதவியுடன் வைஃபை வசதி அமைக்கப்படும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேரும் திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். நன்கு படிக்கும் திருநங்கைகளுக்கு ரூ.3000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.