சபாநாயகர் தனபால் ஒரு சர்வதிகாரியைப் போல் நடந்து கொள்கிறார் - மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்
சட்டசபையில் எந்த பிரச்சனைகள்குறித்தும் பேசவிடாமல், சபநாயகர் ஒரு சர்வதிகாரியைப் போல நடந்துகொள்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: சபாநாயகர் தனபால் சர்வதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறார் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் நடந்துவரும் நீர்நிலைகள் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு வருகிறார். திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் அப்பணிகளைப் பார்வையிட்டபோது செய்தியாளர்கள் கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ள நிலையில் அரசு சார்பில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற சூழ்நிலையில் தான் திமுக சார்பில் மக்களுடைய கஷ்டங்களை, குறிப்பாக விவசாயிகளின் துயரங்களை மனதில் கொண்டு, தமிழகத்தில் எங்கெல்லாம் தூர் வாரும் பணிகளில் ஈடுபட முடியுமோ, அங்கெல்லாம் பணிகளைச் செய்து வருகிறோம் என்றார்.
நேரில் பார்வையிடுவேன்
மேலும், '125 இடங்களில் தூர்வாரும் பணிகளை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், 50 சதவிகித பணிகளை நிறைவடைந்துள்ளது. அந்தப் பணிகளை எல்லாம் நானே நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறேன். தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் காரணத்தால், எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, கூட்டத்தொடர் முடிந்ததும் எல்லா இடங்களையும் நேரில் சென்று பார்வையிட உள்ளேன்'' என்றும் கூறினார்.
அனுமதி இல்லை
சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்களுடைய பிரச்னைகளைப் பேச அனுமதி வழங்கப்படுகிறதா என்றதற்கு, 'திமுக தொடர்ந்து மக்களுடைய பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. ஆளும் கட்சியினரின் முறைகேடுகள், தவறுகள், 'டைம்ஸ் நவ்' என்ற ஆங்கில தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ள குதிரை பேர விவகாரம் பற்றி எல்லாம் பேச சட்டமன்றத்தில் அனுமதி வழங்கப்படுவதில்லை. மீறி நாங்கள் பேசினாலும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் நிலை தான் உள்ளது.
பதில் இல்லை
முதலமைச்சர் உள்பட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று தலைமைச் செயலாளர் அவர்களுக்கு தேர்தல் ஆணையமே நோட்டீஸ் அனுப்பி இரண்டு மாதங்கள் முடிந்திருக்கிறது. ஆனால், உரிய நடவடிக்கையை தலைமைச் செயலாளரோ, இந்த அரசோ எடுக்கவில்லை. இதனை ஒரு வழக்கறிஞர் ஆர்.டி.ஐ., மூலமாக கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். அந்தப் பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. சட்டமன்றத்தில் அதுபற்றி பேசக்கூட சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்'' என்றார்.
சபாநாயகரா... சர்வதிகாரியா?
''தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, குதிரை பேரம் நடந்தது குறித்து புகார் தந்திருக்கிறோம். அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலாளருக்கும் சபாநாயகருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். நியாயப்படி அந்தக் கடித விவரங்களை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை சபாநாயகருக்கு இருக்கிறது. ஆனால் சபாநாயகர் சர்வதிகாரப் போக்குடன் நடந்துள்வதால் அதைப் பற்றி பேச மறுக்கிறார்'' என்றார்.
ஜனாதிபதிக்கு போய் சேரலையே
நீட் தேர்வு முடிகள் குறித்து கேட்டதற்கு, ''நீட் தேர்வை எதிர்ப்பது மட்டுமல்ல, சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று குரல் கொடுத்து, அதற்கான தீர்மானம் வந்தபோது, அதனை ஏகமனதாக நிறைவேற்ற திமுக துணை நின்றது. அந்தத் தீர்மானத்தை நியாயமாக ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி அவர்களிடத்தில் முறையாக அந்தத் தீர்மானம் சென்று சேரவில்லை என்ற செய்தி, ஜனாதிபதி மாளிகையில் இருந்தே வெளியிடப்பட்டது.
கொள்ளைதான் நோக்கம்
இங்கிருக்கும் ஆட்சி அதுபற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலையெல்லாம், ஆட்சியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதில் தான் உள்ளது. பல அணிகளாகப் பிரிந்திருந்தாலும் ஆட்சியை மட்டும் தக்கவைத்து, அதன் மூலம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதில் அனைவரும் கூட்டாக இருக்கிறார்கள். எனவே, அதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, மக்கள் பிரச்னைகள் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை'' என்று சாடினார்.
நாடாளுமன்றத்தில் திமுக கேட்கும்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது பற்றி கூறுகையில் ''தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தும். நாடாளுமன்றம் கூடியதும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து அங்கு குரல் எழுப்புவார்கள்'' என ஸ்டாலின் கூறினார்.