வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்க இறுதி வாய்ப்பு: வாக்காளர் முகாம்களில் குவிந்த மக்கள் !
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் இன்னும் ஓரிரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது.
தமிழகத்தில் உள்ள 65616 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியலில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய இன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று வாக்குச் சாவடிகளில் பொது மக்கள் குவிந்தனர். சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் காணப்பட்டது.பொது மக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்று சரி பார்த்தனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் கடந்த 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர்.
ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏ-யினை பூர்த்தி செய்து அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்து கொடுத்தனர். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணபிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது...