தீபாவளிக்கு எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடங்கியது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்குகான முன்பதிவு தொடங்கிவிட்டது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெருநகரங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பிய வண்ணம் உள்ளனர். சென்னையில் பெரும்பாலும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிப்பதால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தெற்கு இரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கிவருகிறது. அதன்படி எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் 28ம் தேதி(இன்று) காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சிறப்பு கட்டண ரயில் வரும் 31ம் தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில்களுக்கு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதே போல், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் நவம்பர் 11ம் தேதி இரவு 9.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். சுவிதா சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து வரும் நவம்பர் 13ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும். அதிவேக சுவிதா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் நவம்பர் 11ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணி எர்ணாகுளம் சென்றடையும்.
இதே போல், எர்ணாக்குளம் ஜக்ஷனில் இருந்து வரும் நவம்பர் 13ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். கொச்சுவேலியில் இருந்து கவுகாத்தி செல்லும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் வரும் நவம்பர் 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொச்சுவேலியில் இருந்து பகல் 12மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 8.45 மணிக்கு கவுகாத்தி சென்றடையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.