கந்த சஷ்டி விழா - திருச்செந்தூருக்கு அக் 29ல் சிறப்பு ரயில்
நெல்லை: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவுக்கு வரும் அக்டோபர் 29ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனால் தென் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்குகிறது. சூரசம்ஹார விழா அக்டோபர் 29ம் தேதி் நடக்கிறது. இதை முன்னிட்டு கந்த சஷ்டி விழாவுக்கு தெற்கு ரயில்வே சார்பில் 29ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஓம் பிரகாஷ் நாரயணன் கூறியதாவது, திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இயக்கப்படும், சிறப்பு ரயில் 29ம்தேதி காலை 9.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தடையும்.
மறு மார்க்கத்தில் நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் நெலலையில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்கு புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடையும். திருச்செந்தூர்-நெல்லையிடையே மற்றொரு சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.50க்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கத்தில் நெல்லை-திருச்செந்தூர் இடையே நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 10.45க்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.15 மணிக்கு திருச்செந்தூரை அடையும்.
இந்த ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ரயில் நிலையங்களில் நி்ன்று செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.