மகாமகத் திருவிழா: சென்னை-திருச்சி இடையே கும்பகோணம் வழியாக சிறப்பு ரயில்கள்
சென்னை: கும்பகோணம் மகாமகத் திருவிழாவையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணம் வழியாக திருச்சிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் திருவிழா வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை - திருச்சி இடையே சுவிதா சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு 10.45-க்குப் புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண் - 00649), அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மறு மார்க்கத்தில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு 11.50-க்குப் புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண் - 00650) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.