ஜெ., உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு 5வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான உணவை அவர் உட்கொள்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாக பல்வேறு வதந்திகள் பரவின.
இந்நிலையில் முதல்வரின் உடல் நலம் குறித்து மீண்டும் வதந்தி பரவியது. இதனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
''முதலமைச்சரின் உடல் நலம் சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். தொடர் கண்காணிப்பில் உள்ளார்'' என அரசு மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜெயலலிதா உடல்நலம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.