தமிழக மீனவர்கள் 24 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை: தொடரும் அட்டகாசம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரையும், 4 விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை தாக்கி, வலைகளை அறுத்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதோடு அவர்களை கைது செய்து தலைமன்னார் முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 9ம் தேதி 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்துவிட்டு திரும்பி கொண்டிருக்கையில், மன்னார் வளைகுடா வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்து விரட்டி அடித்துள்ளனர். அப்போது, கடற்படையினரிடம் சிக்கி கொண்ட 4 விசை படகுகளையும் அதில் இருந்த 24 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். கடற்படையினரின் விசாரணைக்கு பின் 24 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 54 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 34 விசை படகுகளும் இலங்கை கடற்படையின் பிடியில் உள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 3வது முறையாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறை பிடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.