ஸ்டாலினுடன் சந்திப்பு: சாமியை தொடர்ந்து திமுக-பாஜக கூட்டணிக்கு அடி போடும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்?
சென்னை: திமுக பொருளாளர் முக ஸ்டாலினை வாழும் கலை நிறுவனரும் பாஜக ஆதரவாளருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- தேமுதிக- பாஜக கூட்டணி அமைய வேண்டும்; ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என கொளுத்திப் போட்டிருந்தார் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் திமுக- பாஜக- தேமுதிக கூட்டணி உதயமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
திமுகவும் பாஜகவும் இதனை திட்டவட்டமாகவும் மறுக்கவில்லை. இந்த நிலையில் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகிறார்; தேமுதிக- பாஜக கூட்டணி குறித்து விஜயகாந்த்துடன் பேச பிரகாஷ் ஜவடேகர் சென்னை வருவதாக தகவல்கள் வந்தன.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு
இந்த பரபரப்புகளுக்கு வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்னையில் மு.க. ஸ்டாலினை வீடு தேடி போய் சந்தித்துள்ளார். 'வாழும் கலை' ஆன்மீக அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தமிழகத்தின் பாபநாசத்தை பூர்வீகமாக கொண்டவர்.
பாஜக ஆதரவாளர்
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னர் ஊழலுக்கு எதிரான யாத்திரை போவதாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அறிவித்திருந்தார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய், பாஜகவின் பிளான் ஏ பாபா ராம்தேவ்; பிளான் பி அன்னா ஹசாரே; பிளான் சி ரவிசங்கர் என சாடியிருந்தார்.
பத்மவிபூஷன்
பின்னர் லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வெளிப்படையாக ஆதரவைத் தெரிவித்தார். லட்சுமி தாமரையில்தான் மலரும் எல்லாம் என்றும் கருத்துகளை உதிர்த்திருந்தார். அண்மையில் மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருதெல்லாம் கூட சிறப்பித்திருந்தது.
கூட்டணிக்கு அடியா?
இந் நிலையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திடீரென மு.க.ஸ்டாலினை வீடு தேடி போய் சந்தித்திருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் திமுக- பாஜக கூட்டணி அமைவது குறித்து தெரிவித்த கருத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில்தான் ஸ்டாலினை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சந்தித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஸ்டாலின் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு திமுக- பாஜக இடையேயான கூட்டணி முயற்சியின் 2-வது கட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.