தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக 15-வது முறையாக சீனிவாசன் மீண்டும் தேர்வு
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக 15-வது முறையாக சீனிவாசன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பதவி வகித்தவர் சீனிவாசன். ஐபிஎல் 6வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் பிக்ஸிங் புகாரில் சிக்கினார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த சர்ச்சையில் சீனிவாசன் பெயரும் அடிபட்டது.
தேர்தலுக்கு தடை கோரி வழக்கு
இதனிடையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலிலும் சர்ச்சை வெடித்தது. சென்னையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பான லோதா கமிட்டி அறிக்கையில் கிரிக்கெட் சங்கங்களின் முக்கிய பதவிகளில் சமூகத்திலும், அரசியலிலும் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்களே இருப்பதாலும் அவர்கள் நீண்டகாலம் இப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் சட்டவிதிகளை மாற்றியுள்ளனர்; ஆகையால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு
ஆனால் லோதா கமிட்டி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.
15-வது முறையாக சீனி தேர்வு
இச் சங்கத்தின் தலைவராக சீனிவாசன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 15-வது முறையாக அவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
10-வது முறையாக காசி..
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக காசி விஸ்வநாதன் 10-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக அகோரம், முரளி, ராமன், ஜி.சீனிவாசன், பாஸ்கரன் மற்றும் ரமேஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.