ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிந்தது - மொத்தம் 50 பேர் மனுத் தாக்கல்!
திருச்சி : ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, ஆம் ஆத்மி வேட்பாளர் உட்பட 33 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களையும் சேர்த்து 50 பேர் அங்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழந்தார். இதனால் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அடுத்தமாதம் 13ம் தேதி ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது.
தி.மு.க, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 18 பேர் இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரை மனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க. கட்சிகள் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவித்துவிட்டன. தே.மு.தி.க., பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. எனவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 4 முனை போட்டி உறுதியாகிவிட்டது.
இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் முடிவடைந்தது. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வருகிற 30-ந்தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.
அன்றைய தினமே வேட்பாளர் இறுதி பட்டியில் வெளியாகிறது. அதன்பிறகே எத்தனை வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள் என்பது தெரியவரும்.
அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உள்பட 50 பேர் கொண்ட தேர்தல் பொறுப்பாளர்களும், தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 83 பேர் கொண்ட தேர்தல் பொறுப்பாளர்களும் தொகுதியில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இதுபோல் பா.ஜனதா, கம்யூனிஸ்டு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். இதனால் ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.
அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகர்கள் ராமராஜன், வையாபுரி, ஆனந்தராஜ், தியாகு, சிங்கமுத்து, நடிகைகள் குயிலி, விந்தியா உள்ளிட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இதேபோல், தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து பிப்ரவரி மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் நடிகர்கள் வாகை சந்திரசேகர், குமரிமுத்து உள்ளிட்டோரும் பிரசாரத்திற்கு வர உள்ளனர்.
பா.ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணியத்தை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ், நெப்போலியன், எச்.ராஜா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இவர்கள் வருகிற 1-ந்தேதி முதல் தங்கள் பிரசாரத்தை தொடங்குகிறார்கள். அதன் பிறகு ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடையும். 11-ந்தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
பிப்ரவரி 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் பதிவான வாக்குகள் 16-ந்தேதி எண்ணப்படுகிறது. அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.