பட்டையைக் கிளப்ப ஸ்ரீரங்கம் ரெடி.... களத்தில் அதிமுக, திமுக, பாஜக, லதிமுக உள்பட 28 வேட்பளர்கள்!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 28 வேட்பாளர்கள் இறுதியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.
தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். மொத்தம் பெறப்பட்ட 59 மனுக்களில் தகுதிவாய்ந்ததாக 45 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 34 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 12 பேர் அளித்திருந்த 14 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனுக்களை வாபஸ் பெறக் கடைசி நாளான இன்று, 6 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த போது 28 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களே இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் உள்ள போதிலும் அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு இடையேதான் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்களும், கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மும்முரமான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.