பல லட்சம் ரூபாய் மோசடி - திருச்சி கோயில் கண்காணிப்பாளர் “திடீர்” தலைமறைவு- போலீஸ் வலை வீச்சு!!
ஸ்ரீரங்கம்: பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான திருச்சி அன்பில் மாரியம்மன் கோவில் கண்காணிப்பாளர் சுதர்சனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது அன்பில் மாரியம்மன் கோவில். இதன் கண்காணிப்பாளராக இருந்த சுதர்சனம், கோயில் நிர்வாகத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்காமலும், விடுப்பு உள்ளிட்ட எந்த தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவாகி விட்டார்.
இந்த சுதர்சனம், ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்களுக்கான அரங்கர் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராகவும் உள்ளார். இவர் தலைமறைவானது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவையைச் சேர்ந்த மில் அதிபர் ரகு என்பவரிடம் 55 லட்ச ரூபாயும் மற்றவர்களிடமும் பல லட்ச ரூபாயும் சுதர்சன் மோசடி செய்துள்ளது அம்பலமானது.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கோயிலில் வேலை வாங்கித் தருவதாக சொல்லியும் பலரிடம் பல லட்ச ரூபாய் சுதர்சனம் மோசடி செய்தும் போலியாக பணி நியமன ஆணைகளை வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு பணி இறக்கம் செய்யப்பட்டவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது சுதர்சன் குடும்பத்துடன் 20 நாட்களாக தலைமறைவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை திருச்சி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.