போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் படுத்து உறங்கிய ரூ.10000 கோடி அதிபதி பச்சமுத்து
சென்னை: பள்ளி ஆசிரியராக இருந்து, எஸ்ஆர்எம் என்கிற மிக பிரம்மாண்ட கல்வி நிறுவனங்களுக்கு தலைவராக உயர்ந்த பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் வியாழக்கிழமை இரவு போலீஸ் விசாரணை முடிந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் படுத்து உறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரணாசி சென்று முக்தி அடைய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேந்தர் மூவிஸ் மதன் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானதும், இதற்கு எஸ்ஆர்எம் குழுமம் தான் காரணம் என்று அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டி இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மருத்துவ கல்லூரி சீட்டுக்காக மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட மதன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் கடந்த மூன்று மாதங்களாக மர்மமாகவே உள்ளன.
காணாமல் போன மதன் குறித்தும், எஸ்ஆர்எம் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை ஏமாற்றி புகாரின் கீழ், முன்னதாக இந்திய ஜனநாயக கட்சியின் டாக்டர் குழுவின் மாவட்ட உறுப்பினர் பார்கவன் பச்சமுத்து, கட்சியின் மதுரை பிரிவு மாவட்டத் தலைவர் சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மகனுக்கு டாக்டர் சீட் கேட்டு மதனை டாக்டர் ஜெயச்சந்திரன் என்பவர் அணுகியயுள்ளார். அப்போது பணத்தை தனது மேலாளர் சுதிரிடம் கொடுக்க மதன் கூறியதாகவும், அதன்படி கொடுத்த பணத்தை கணக்காளர் குணாவிடம் சுதிர் கொடுத்ததாகவும், பின்னர் தான் ஏமாற்றப்பட்டதாகவும் டாக்டர்ஜெயச்சந்திரன் புகார் அளித்து இருந்தார். இந்தப் புகாரின் கீழ், முதல் குற்றவாளியாக சுதிர் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக குணா சேர்க்கப்பட்டனர்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத் தலைவர் டி. ஆர். பச்சமுத்துவை ஏன் விசாரிக்கவில்லை அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை என்று சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பச்சமுத்துவை அழைத்து வந்த போலீசார், மருத்துவக் கல்லூரியில் 111 மாணவர்களுக்கு சீட் தருவதாகக் கூறி ஏமாற்றியது, மாணவர்களிடம் இருந்து ரூ. 75 கோடி வசூல் செய்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை முடிந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலேயே பச்சமுத்து வியாழக்கிழமை இரவு படுத்து தூங்கினார். வெள்ளிகிழமை காலை அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய ஒரு வார காலத்தில் அதிரடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இன்று பச்சமுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
பச்சமுத்துவின் மீது ஏமாற்றுதல் (420), மற்றவர்களின் சொத்துக்களை தவறான வழியில் அபகரித்தல் (406) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.