எஸ்.எஸ்.எல்.சி.: சமூக அறிவியலில் 39, 398, கணிதத்தில் 18, 754 பேர் சதம்!
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் 5 பாடங்களில் சமூக அறிவியலில் தான் அதிகமானோர் 100க்கு 100 மதிபெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிகுளத்தில் உள்ள நோபல் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவர் சிவக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவி பிரேமசுதா ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழ் பாடத்தில் 73 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் ஆங்கில பாடத்தில் 51 பேரும், கணிதத்தில் 18 ஆயிரத்து 754 பேரும், அறிவியலில் 18 ஆயிரத்து 642 பேரும், சமூக அறிவியலில் 39 ஆயிரத்து 398 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து 4 பேர் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் மனம் உடைய வேண்டாம் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.