10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்... 12-வது இடத்துக்கு முன்னேறிய நெல்லை!
எஸ்எஸ்எல்சி மாணவர் தேர்ச்சியில் நெல்லை கல்வி மாவட்டம் 12-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நெல்லை: 10-ம் வகுப்பு தேர்வில் முடிவுகள் வெளியானதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதத்தில் நெல்லை கல்வி மாவட்டம் 12-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதுவும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை போல் ஆரவாரம் இல்லாமல் வெளியானது. இது குறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு பாலா கூறியதாவது, நெல்லை கலெக்டர் கருணாகரன் வழிகாட்டுதலின் படி 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிக்காக கடந்த கல்வியாண்டில் பல்வேறு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
இதன்படி கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. அரையாண்டுத் தேர்வில் 95 சதவீத தேர்ச்சிக்கு கீழ் இருந்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு வழிகாட்டப்பட்டன.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. மேலும் பொது தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தலைமை ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக செயல்படவும், கல்வி தரம் உயரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கற்றலில் பி்ன் தங்கிய மாணவர்களுக்கு அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு கற்றல் கையேடு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்த கையேடு மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து 16-வது இடத்திலிருந்து 12-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த தேர்ச்சி விகிதத்தை வரும் கல்வி ஆண்டில் மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.