சாயம் போன தமிழக சட்டம்-ஒழுங்கு- மு.க.ஸ்டாலின் காட்டம்
சென்னை: தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான் என்று கூறும் அம்மையாரின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சாயம் வெளுத்துவிட்டது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்து பேசிய அவர், "தயவுசெய்து முதலில் 108 ஆம்புலன்ஸ் வண்டிக்கு கழகத் தோழர்கள் வழி விட்டு ஒதுங்கி நிற்க வேண்டும். நேற்றக்கு கூட ஜெயலலிதாவின் பிரச்சாரம் நடந்த விருத்தாசலத்தில் பொதுக்கூட்டத்திலேயே 2 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். நாம் அவரை போல இருக்காமல் உயிருக்கு போராடியபடி ஆம்புலன்சில் செல்பவர்களுக்கு வழி விடவேண்டும். இது திமுக. தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டு இருக்கக் கூடிய, அவரது வழியில் நடக்கக் கூடிய திமுக. அதுமட்டுமல்ல, இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்து ஆபத்தான நிலையில் உள்ள பல பேரின் உயிர்களை காத்ததும் தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
இன்றைக்கு காலையில் இருந்து ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் செய்தி என்னவென்று கேட்டால், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படக் கூடிய செய்திதான் இன்று முழுவதும் வந்திருக்கிறது. அடக்குமுறைகளுக்கு அதிமுகவினர் எப்படியெல்லாம் துணை நிற்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. நேற்றைக்கு சேலத்திற்கு சென்ற ஜெயலலிதா சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது என்று பேசியிருக்கிறார். தமிழ்நாடே அமைதியாக உள்ளது என்று பேசியிருக்கிறார். ஆனால் இன்றைக்கு பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட செய்தி வந்து கொண்டிருக்கிறது. என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டார்கள் என்று கேட்டால் அந்த அம்மையார் நேற்று சேலம் கூட்டத்தில் பேசியபோது 2 பேர் இறந்திருக்கிறார்கள். ஏற்கனவே விருத்தாசலத்தில் 2 பேர் இறந்தார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை. அந்த அம்மையார் 3 அல்லது 4 மணிக்கு வந்து பேசும் பொதுக்கூட்டத்திற்கு காலை 9 மணிக்கே ஆடுமாடுகளை அழைத்து வருவது போல மக்களை கொண்டு வந்து அங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள்.
வானிலை மையம் கூட, இந்த தேதிகளில், இந்த நேரத்தில் வெயில் கடுமையாக இருக்கும் எனவே குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் ஜெயலலிதா கூட்டத்தில் பேச வருகிறார். எனவே அதற்காக மக்களை கொண்டு வந்து அடைத்து வைக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியாமல் அவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்படியும் பாதி இடம் காலியாக இருந்ததால் காலை 9 மணி முதல் உட்கார்ந்து இருப்பவர்கள் தண்ணீர் குடிக்க வெளியே செல்ல முயன்று இருக்கிறார்கள்
தமிழகம் "அமைதி பூங்கா"வாக இருக்கிறது என்று ஜெயலலிதா பேசிய 24 மணி நேரத்திற்குள் அவரது ஆட்சியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. ஜெயலலிதா பேரவையின் செயலாளரே பத்திரிக்கையாளர்களை தாக்கி இருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது. திமுகவின் சார்பிலும், தலைவர் கலைஞரின் சார்பிலும் நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.