ஜெ. சமாதியில் சசிகலா சபதம்.. ஆத்திரத்தின் வெளிப்பாடு.. ஸ்டாலின் விளாசல் !
முதல்வர் ஆக முடியவில்லையே என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடு தான் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம் செய்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் ஆக முடியவில்லை என்ற ஆத்திரத்தில் சசிகலா மெரினாவில் நடந்துக் கொண்ட விதம் ஆத்திரத்தின் வெளிப்பாடு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எடுத்த சபதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 வருடம் சிறை தண்டனை பெற்று சிறைக்கு செல்கிறார், கோபத்தின் விளிம்பில் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதுதொடர்பாக எல்லாம் விளக்கம் அளிக்கமுடியுமா? ஒரு நாள் முதல்வர் ஆன பின்னர் சிறைக்கு சென்று இருந்தால் அங்கு முதல் வகுப்பு கிடைத்து இருக்கலாம். அது நிறைவேறாமல் போனதால் அதன் வெளிப்பாடாக அவ்வாறு நடந்துக்கொண்டார் என ஸ்டாலின் தெரிவித்தார். வைகோ குறித்த கேள்விக்கு, அவர் ஒரு அரசியல் ஞானி. அவர் பற்றியெல்லாம் பதில் கூற விரும்பவில்லை என்றார்.