ஏரியைப் பார்வையிட எதற்குத் தடை.. 5 நிமிடம் பொறுப்பேன்.. தடையை மீறுவேன்.. ஸ்டாலின் ஆவேசம்
ஏரியைப் பார்வையிட எதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதற்கான ஆணையைக் காட்ட 5 நிமிடம் கெடு விதித்து போலிசாரிடம் மு.க. ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.
சேலம்: எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, கோவையில் இருந்து காரில் வந்த ஸ்டாலினை போலீசார் தடுத்த நிறுத்திய போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீட் தேர்வு போராட்டம்
நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும், அதற்குத் தமிழகத்தில் நடைபெறும் எடப்படாடி பழனிச்சாமி தலைமையிலான ‘குதிரைப் பேர' அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம், திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை இன்று மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை நடத்தச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அனைவரும் பங்கேற்பு
இதில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ - மாணவியர், அவர்களது பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு இந்தப் போராட்டத்தை மிகப்பெரிய போராட்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
வஞ்சக எண்ணத்தோடு எடப்பாடி
அப்படிப்பட்ட இந்தப் போராட்டத்தை, எப்படியாவது கொச்சைப்படுத்த வேண்டும், அந்தப் போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்று விடக்கூடாது என்ற வஞ்சக எண்ணத்தோடு எடப்படாடி பழனிச்சாமி தலைமையிலான ‘குதிரைப் பேர' ஆட்சி, எப்படியாவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கெடுத்து, இந்தப் போராட்டத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு, இன்று காலையில் எடப்பாடி தொகுதியில் அமைந்துள்ள கட்சராயன் ஏரியில், ஏற்கனவே இரண்டு மாத காலமாக திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தோழர்கள், நண்பர்கள் மிகச் சிறப்பாக அந்த ஏரியைத் தூர்வாரி முடித்திருக்கிறார்கள். அதற்கான புகைப்படங்கள் இவை.
பொதுமக்களின் ஒத்துழைப்போடு..
இதனைப் பொதுமக்களின் ஒத்துழைப்போடு தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல, திமுக சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இப்படிப்பட்ட பணிகளை நான் தமிழகம் முழுவதும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருகிறேன்.
பார்வையிடச் சென்ற போது..
அந்தவகையில் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் அவர்கள் என்னிடம், "நீங்கள் கட்சராயன் ஏரியைப் பார்வையிட வேண்டும்", என்று கேட்டுக் கொண்டார். அந்தக் கோரிக்கையை ஏற்று, இன்று காலை கோவை வந்து, அங்கிருந்து இப்போது அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.
கார்களை மறித்து தடை
போகிற வழியில், இந்த கனியூர் பகுதியில் காவல்துறையினர் எங்கள் கார்களை நிறுத்தி, நீங்கள் அங்குப் போகக்கூடாது, நீங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். "அப்படி தடை செய்யப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் என்ன", என்று கேட்டேன். உடனே, ஒரு மனுவை என்னிடம் கொடுத்தார்கள். அதில் மாலையில் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்துக்குத் தடை என்றுதான் இருக்கிறதே தவிர, நான் இந்தச் சாலையில் செல்லத் தடை என்று ஆணை இல்லை.
ஐந்து நிமிடம் பொறுமை
எனவே, "அப்படி அந்த ஆணை இருந்தால் காட்டுங்கள், நான் சட்டத்துக்குக் கட்டுப்படுகிறேன். இல்லையென்றால் நான் கண்டிப்பாக கட்சராயன் ஏரியைச் சென்று பார்ப்பேன் என்று சொல்லி", இருக்கிறேன். "இதோ ஐந்து நிமிடத்தில் காண்பிக்கிறோம்", என்றார்கள். பத்து நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் ஐந்து நிமிடம் பொறுப்பேன். இல்லையென்றால், தடையை மீறி கட்சராயன் ஏரியைச் சென்று பார்ப்பேன் என்பது உறுதி என்று ஸ்டாலின் கூறினார்.