அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ பொளேர்!
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த தப்பாத பிள்ளையாக செயல்படுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த தப்பாத பிள்ளையாக செயல்படுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை யார் அமைச்சர் எந்தத்துறைக்கு அமைச்சர் என்று தெரியாத நிலை இருந்து வந்தது. ஊடகங்களுக்கு பேட்டி என்றாலே மேயர் முதல் மினிஸ்டர் வரை அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தைரியமாக பேட்டி அளித்து வருகின்றனர். இன்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.
தினகரன் கூட்டத்திற்கு அழைப்பு
அப்போது பல தடைகளைத் தாண்டி விரைவில் இரு அணிகளும் இணைந்து சிறப்பாகச் செயல்படுவோம் என்றார். தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய அவர், இதில் கலந்துகொள்வது குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்றார்.
யாரும் குழப்ப முடியாது
தினகரன் மட்மின்றி யார் தங்களைப் பற்றி குறை கூறினாலும் அதனை முறியடித்து சிறப்பாகச் செயல்படுவோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது என்ற அவர் விரைவில் அதிமுக இணையும் என்றார்.
இரட்டை இலை சின்னத்துடன்
அதிமுக 3 அணிகளாக பிரிந்தாலும் எம்எல்ஏக்கள் யாரும் வேறு கட்சிக்கு செல்லவில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். இரட்டை இலை சின்னத்துடன் விரைவில் மக்களை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார். பத்திரிக்கையில் இடம்பெற
எம்ஜிஆர் மறைந்த போது ஏற்பட்ட சூழல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் பத்திரிகையில் இடம் பெறுவதற்காகவே அவரது தந்தையைப் போல அரசின் மீது குறைகளேப் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அப்பாவுக்கு தப்பாத பிள்ளை
அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் உள்ளார் என்றும் செல்லூர் ராஜூ கூறினார். திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகள் கடனில் இயங்கியது, ஆனால் தற்போது வருமான வரி செலுத்தும் அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.
வழிதவறிச் செல்கிறார் கமல்
கமல் ஒரு நல்ல நடிகர் என்ற செல்லூர் ராஜூ தற்போது அவர் வழிதவறிச் செல்வதாக கூறினார். மேலும் அதனை கமல் மிக விரைவில் உணருவார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.