அதிமுக உட்கட்சி பூசல் - திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் நொடிக்கு நொடி முக்கிய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இடையேயான அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஆட்சியை கவிழ்க்கப் போவதில்லை என்று டிடிவி தினகரன் கூறினாலும் ஆளும் கட்சிக்கு ஆட்டம் காட்டும் வேலையை தொடங்கிவிட்டார். எனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
சுதந்திர தினத்திற்குப் பிறகு தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னதாக இன்று மாவட்ட செயலாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முரசொலி பவளவிழா பற்றியும், அதிமுகவின் உட்கட்சி பூசல், தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின்
ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.