கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறையாவது தொழிலதிபர்களை ஜெ.,சந்தித்ததுண்டா? ஸ்டாலின்
கோவை: கடந்த 5 ஆண்டுகளில் கோவை வழியாக பல முறை கொடநாடு சென்ற ஜெயலலிதா ஒரு முறையாவது கோவை தொழிலதிபர்களை அழைத்து பேசியதுண்டா என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வேனில் பிரசாரம் செய்தார்.
சூலூர், சிங்காநல்லுார், வெள்ளலூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுந்தராபுரம், ஆத்துப்பாலம் கரும்புக்கடை, உக்கடம், ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, கவுண்டம்பாளையம், துடியலுார் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க. ஆட்சி காலத்தில் "கமிஷன், கரெப்ஷன்" இன்றி தொழில் தொடங்க அனுமதிகள் கொடுக்கப்பட்டன.
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வர வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே கருணாநிதியின் நோக்கமாக இருந்தது. அதனால், தமிழகம் தி.மு.க. ஆட்சி காலத்தில் "ஜொலிக்கும் நட்சத்திரமாக"(GROWTH STAR) ஆகத் திகழ்ந்ததாக குறிப்பிட்டார்.
இன்றைக்கு மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்திற்கு வந்து நம் தொழிலதிபர்களை தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க அழைக்கிறார்கள். மத்திய பிரதேச முதல்வர் சவுகான் வந்துவிட்டார். கர்நாடக முதல்வர் சித்தாராமையை வந்து விட்டார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்து விட்டார்.
தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதா எத்தனை முறை இந்த வழியாக கொடநாடு போயிருப்பார்? தன் முதலமைச்சர் அலுவலகத்தையே கொடநாட்டில் வைத்து எத்தனை நாள் செயல்பட்டிருப்பார்? என்றைக்காவது ஒரு நாள் இந்த கோவை தொழிலதிபர்களை, கொங்கு மண்டல தொழிலதிபர்களை அழைத்து ஜெயலலிதா பேசியதுண்டா? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் இந்த ஐந்தாண்டு காலம் "தொழில்துறையின் இருண்ட காலம்" தமிழக முன்னேற்றத்தின் "கற்காலம்". இனியொரு முறை ஜெயலலிதாவிற்கு வாய்ப்பு கொடுத்தால், இருக்கின்ற தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம் உருவாகி விடும் என்று எச்சரிக்கை விடுத்தார் ஸ்டாலின்.