தொண்டர்களின் எழுச்சியை பார்க்கையில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: தொண்டர்களின் எழுச்சியை பார்க்கையில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகி இல்லத் திருமணம் இன்று சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. திருமணத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில்,
இது போன்ற சீர்திருத்த திருமணத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி. 1967ம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சுயமரியாதை சீர்திருத்த திருமணங்கள் அதிக அளவில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலக அளவில் திமுக மட்டும் தான் ஜனநாயக கட்சி ஆகும். உட்கட்சி தேர்தல் நல்ல முறையில் நடத்தப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்தபோதும் கூட கட்சியினர் உட்கட்சி தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றனர். இதை பார்த்து திமுக அழிந்துவிட்டதாக கூறியவர்கள் எல்லாம் வாயடைத்து போயினர்.
ஆளும் அதிமுகவில் தலைவரை தேர்வு செய்த பிறகே கிளை தேர்தல் நடைபெற்றது. ஆனால் திமுக ஜனநாயக கட்சி என்பதால் அடிமட்ட தேர்தலை முடித்த பிறகே தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுகவை பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகலாம். ஆனால் வட்ட செயலாளர் பதவிக்கு உழைப்பவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்சியில் இருக்கும் எழுச்சியை பார்க்கையில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கப் போகிறது என்று தெரிகிறது என்றார்.