ஸ்டார்ட் மியூசிக்...: நீலகிரியில் படுகர்களுடன் டான்ஸ் ஆடிய ஸ்டாலின்!
ஊட்டி: நமக்கு நாமே இரண்டாம் கட்ட பயணத்தை நீலகிரியில் தொடங்கிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடினார். அப்போது படுகர் இன மக்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சந்திக்கும் 'நமக்கு நாமே' திட்டத்தை கடந்த மாதம் கன்னியாகுமரியில் துவங்கிய ஸ்டாலின் திருச்சியில் கடந்த 2ம் தேதி தனது முதல் கட்ட பயணத்தை முடித்தார். கடந்த 4 நாட்கள் ஒய்வு எடுத்த ஸ்டாலின், இன்று காலையில் இரண்டாம் கட்ட பயணத்தை நீலகிரி மாவட்டத்தில் துவக்கினார்.
உற்சாக வரவேற்பு
முதுமலை, தெப்பக்காடு பகுதிக்கு காலையில் சென்ற ஸ்டாலினுக்கு இருளர் இன மக்கள் காட்டுப்பூ மாலை மற்றும் நெல்லி மாலையை அணிவித்து வரவேற்றனர்.
பொதுமக்களிடம் குறை கேட்பு
வீதிகளில் நடந்து சென்று மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டார்.
எங்கள கண்டுக்க மாட்டீங்களா?
குடிநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படாத நிலையில் தாங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எங்க பிரச்னையை எல்லாம் கண்டுக்கவே மாட்டீங்களா? என பெண் ஒருவர் கேட்டபோது, நாங்களாமா ஆட்சியில இருக்கோம் என பதிலளித்தார் ஸ்டாலின்.
கூடலூரில் ஸ்டாலின்
தொடர்ந்து கூடலூர் வந்த ஸ்டாலின், மக்களுக்கிடையே பேசினார். அப்போது, நீலகிரி மாவட்டத்தின் உதகை, உலக அளவில் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலக மக்களை எல்லாம் மகிழ்விக்க கூடிய நீலகிரி மக்களாகிய நீங்கள் பல கொடுமைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டுகளில் நீங்கள் சொல்ல முடியாத அளவு பல துன்பங்களையும் துயரங்களை சந்தித்து வருகிறீர்கள்.
நிலப்பட்டா பிரச்சினை
கூடலூர் சட்டமன்ற தொகுதியின் முக்கிய பிரச்னையான பிரிவு 17ன் கீழ் வரும் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கும் முயற்சியை தி.மு.க. ஆட்சி மேற்கொண்டது. 18 முறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி, 1974ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கிலும் சாதகமான தீர்ப்பை பெற்றுத்தந்தது தி.மு.க. ஆட்சி. ஆனால் அதற்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி, இதை கிடப்பில் போட்டு விட்டது.
மின்திட்டம் என்ன ஆச்சு?
2016ல் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, செக்ஷன் 17 பிரிவில் வரும் 35 ஆயிரம் நிலங்களுக்கான பட்டாவை 16 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குவோம் என உறுதியளிக்கிறேன். நீலகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய மின் திட்டம் ஒன்றை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா அறிவித்தார். அதே திட்டத்தை இப்போது சட்டமன்றத்தில் 110 விதியின் கீழும் அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை.
அரசுக்கு கவலையில்லை
'சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' என பழமொழி ஒன்று உண்டு. அதன்படி தான் இங்கு வெறும் ஏட்டளவில் தான் திட்டங்கள் உள்ளது. செயல்பாட்டில் எதுவும் இல்லை.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்னை, பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காதது, மாஸ்டர் ப்ளான் பிரச்னையால் வீடு, கடைகளை இடிக்கும் சூழல், படகு இல்லத்தில் கழிவு நீர் கலக்கும் பிரச்னை என எந்த பிரச்னை குறித்து அ.தி.மு..க. அரசு கவலை கொண்டதாக தெரியவில்லை.
குடிநீர் திட்டம்
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஊட்டி 3வது குடிநீர் திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு விட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த சுற்றுலா வளர்ச்சியை, 2011ல் 33.08 சதவீதமாக உயர்த்தியது தி.மு.க. அரசு. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் சுற்றுலா வளர்ச்சி மீண்டும் படிப்படியாய் குறைந்துள்ளது. ஹிந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலையை கூட தக்க வைத்துக்கொள்ள முடியாத அரசாக இது உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் எந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. எந்த பணியும் நடக்கவில்லை என்றார்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
அனுமாபுரம் வந்த ஸ்டாலின், வழியில் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஸ்டாலினிடம் முறையீட்டனர். போனஸ், பென்ஷன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக்கோரி மனு அளித்துள்ளனர். தேயிலை தொழிலாளர்களின் குறைகளைக் மு.க. ஸ்டாலின் கேட்ட ஸ்டாலின் திமுக ஆட்சியில் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
பாரம்பரிய நடனம்
நீலகிரி ஷீட்டிங் மட்டத்தில் தோடர், கோத்தர் இன மக்களுடன் ஸ்டாலின் சந்தித்து பேசினார். பழங்குடியின மக்களை போன்று உடல் மீது சால்வை போர்த்திக்கொண்ட ஸ்டாலின், அவர்களின்
பாரம்பரிய நடனத்தை இணைந்து ஆடினார். இதன்பிறகு எக்காளம் என்ற வாத்திய கருவியை இசைத்தார். மலைவாழ் மக்கள் மேளத்தை அடித்தார்.தங்களைப் பார்க்க வந்த ஸ்டாலினுக்கு
எக்காளம் முழங்க பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.