திமுக-விற்குத் தான் மக்கள் நலனில் அக்கறை உள்ளது... திண்டுக்கல் மாவட்டத்தில் ஸ்டாலின்!
திண்டுக்கல்: திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நமக்கு நாமே என்ற விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின். இந்தப் பயணத்தின் 9வது நாளான இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அவர் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
வத்தலக்குண்டு மார்க்கெட்டில் இன்று காலை 8.45 மணிக்கு தனது விடியல் மீட்பு பயணத்தை அவர் தொடங்கினார். வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், பின்னர் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் வியாபாரிகள், விவசாயிகளைச் சந்தித்தார். அங்கு வியாபாரிகள் கொடுத்த தேநீரை அவர் குடித்தார்.
அதனைத் தொடர்ந்து சின்னாளப்பட்டி சென்ற ஸ்டாலின், அங்கு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி திமுக தான்" என்றார்.
மேலும், "கருணாநிதி உருவாக்கிய மகளிர் சுயஉதவிக்குழுக்களை, ஜெயலலிதா தான் துவக்கியதாக கூறி வருகிறார். இதுபோன்று கடந்த 4 ஆண்டுகளாக, முதல்வர் ஜெயலலிதா மக்களை தொடர்ந்து ஏமாற்றியே வருகிறார். ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள், இதுவரைக்கும் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. திமுக கட்சிக்கு தான் மக்கள் நலனில் அக்கறை உள்ளது. திமுக தற்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும், உங்களின் நலன் மேம்பட உங்களை தேடி வந்துள்ளோம். ஆளுங்கட்சி ஒருமுறையாவது உங்களை தேடிவந்துள்ளதா. குறைந்தது இப்பகுதி எம்.எல்.ஏ. தேர்தலில் ஓட்டளித்த உங்களுக்கு நன்றி தெரிவிக்கவாவது வந்துள்ளாரா" என இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.