37 எம்.பி.க்கள் இருந்தும் மருத்துவ நுழைவு தேர்வை ஏன் தடுக்கவில்லை? - ஸ்டாலின்
சென்னை: அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் 37 எம்.பி.க்கள் இருந்தும் மருத்துவக் கல்வியில் நுழைவுத் தேர்வு கொண்டு வருவதை தடுக்காதது ஏன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சிம்லா முத்துச்சோழனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், அதிமுகவுக்கு ஆதரவாக தலைமைச் செயலாளரும், அரசு அதிகாரிகளும் வேலை செய்கின்றனர். இதை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது என்றார்.
மேலும் அவர் பேசியதாவது: தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், மாநில உளவுத்துறை. இதுதான் அதிமுகவின் புதிய கூட்டணி. கிரானைட் ஊழலை மூடி மறைக்க அந்த வழக்கை சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரிக்கக் கூடாதென உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டவர் ஜெயலலிதா.
தொடர்ந்து கிரானைட் வழக்கில் உயர் நீதிமன்றம் ரூ. 10000 அபராதம் விதித்த நிலையில் கிரானைட் ஊழல் பற்றி ஜெயலலிதா பேசுவது வேடிக்கையாக உள்ளது. கிரானைட் ஊழல் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டதே திமுக ஆட்சியில் தான். சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தை காப்பாற்றவே ஜெயலலிதா பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மாநகரம் சீரழிந்துவிட்டது. சென்னை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படவில்லை.
இன்று உங்களுக்கு எல்லாம் தெரியும், திமுக ஆட்சியில் தான் தொழிற்கல்விக்கு இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு மருத்துவக் கல்வி கற்க வேண்டிய மாணவர்கள் கதி கலங்கி நிற்கிறார்கள். மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இனி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், முதுநிலை மருத்துவப் படிப்பு போன்றவற்றிற்கு மாநில அரசு தேர்வு நடத்த முடியாது.
ஆனால் 37 எம்.பி.க்களை வைத்துள்ள ஜெயலலிதா இதற்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. "கடிதம் எழுதிவிட்டால் என் கடமை முடிந்து விட்டது" என்று நினைக்கும் ஒரு முதல்வராக இருக்கிறார்.
ஏழை எளிய மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் இந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். ஆனால் இது பற்றியெல்லாம் ஜெயலலிதாவிற்கோ, அதிமுகவின் எம்.பி.க்களுக்கோ அக்கறையில்லை. அதிமுக சார்பில் 37 எம்.பி.க்கள் இருந்தும் மருத்துவக் கல்வியில் நுழைவுத் தேர்வு கொண்டு வருவதை தடுக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.