திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர் நலவாரியம்: மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் பதிவு செய்துள்ளதாவது:
ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும். உலக நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் போற்றிப் பாதுகாக்கப்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகை சுதந்திரம் என்ன பாடுபட்டது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சித்து கட்டுரை வெளியிட்டால், செய்திகளை ஒளிபரப்பினால் அவதூறு வழக்குகள் அடுக்கடுக்காகப் பாய்ந்ததை அறிவோம். பல்வேறு ஏடுகள் மீதும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் மீதும் ஜெயலலிதா அரசு போட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலானதாகும்.
செய்தி வாசிப்பாளர் மீது அவதூறு வழக்கு போட்ட கொடுமையும்கூட தமிழகத்தில்தான் நடந்தது. கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிவிட்டது. தி.மு.கழக அரசு அமைந்ததும் பத்திரிகையாளர் நலனையும் அவர்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையிலான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
திமுக தேர்தல் அறிக்கையிலும் அதற்கான வாக்குறுதியைத் கருணாநிதி வழங்கியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்பதுடன் பத்திரிகையாளர் நல வாரியமும் அமைக்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்து, ஊடகத்துறையினரின் சுதந்திரம் என்றென்றும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.