பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கருணாநிதியுடன் ஸ்டாலின், அழகிரி அடுத்தடுத்து திடீர் சந்திப்பு
திமுக தலைவர் கருணாநிதியுடன் அக்கட்சியின் பொருளாரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டானின், அவரது சகோதரர் மு.க.அழகிரி ஆகியோர் அடுத்தடுத்து திடீரென சந்தித்துப் பேசினர்.
சென்னை: அண்மையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது மகன்களான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பினார் கருணாநிதி.
இந்த நிலையில், "கருணாநிதி மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அதுவரை நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
எனவே கருணாநிதியை பார்க்க நேரில் வருவதைத் கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும் தவிர்க்க வேண்டும்" என்று திமுக தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து மு.க.அழகிரியும், கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து இருவரும் விசாரித்ததாக கூறப்படுகிறது.
அடுத்த வாரம் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இருவரும் அடுத்தடுத்து கருணாநிதியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மேலும், துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோரும் கருணாநிதியை சந்தித்தனர். பொதுக்குழுவின்போது, திமுக செயல் அல்லது துணைத் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படக் கூடும் என்ற நிலையில் இச்சந்திப்புகள் நடந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.