முரசொலி பவளவிழா.. கருணாநிதியிடம் அழைப்பிதழை வழங்கினார் ஸ்டாலின்
முரசொலி பவளவிழா அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை: அடுத்த மாதம் நடைபெறவுள்ள முரசொலி பவளவிழா நிகழ்ச்சியின் அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியிடம் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வழங்கினார்.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அன்று முரசொலி பத்திரிகை தொடங்கிய நாளாகும். கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 1948ல் வார இதழாகவும், 1960ல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழா ஆண்டு திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11ம் ஆகிய தேதிகளில் முரசொலியின் பவள விழா பிரமாண்டமாக திமுகவினரால் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், முரசொலி பவளவிழா அழைப்பிதழை இன்று மு.க ஸ்டாலின், முதுமை காரணமாக ஓய்வெடுத்து வரும் தனது தந்தையும், திமுகவின் தலைவருமான கருணாநிதியிடம் வழங்கினார். அப்போது கழக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடனிருந்தார்.