தான் 'ஸ்டாலின்' என்பதை நிரூபித்து விட்டார் மு.க.ஸ்டாலின்.... கருணாநிதி பெருமிதம்
சென்னை: நமக்கு நாமே சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தனது பெயருக்கு ஏற்ப தன்னை இரும்பு மனிதராக நிரூபித்துள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பிரச்சார பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். பொதுமக்களை நேரில் சந்தித்தது, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தது என ஸ்டாலினின் இந்த அதிரடி சுற்றுப்பயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் அவர் இரண்டாம் சுற்று பிரச்சார பயணத்தைத் தொடங்க இருக்கிறார்.
இந்நிலையில், கரூர் மாவட்ட மதிமுக செயலாளர் பரணி கே.மணி மற்றும் மதிமுக நிர்வாகிகள் உட்பட பலரும் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்து பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினைப் பாராட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதர்...
ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன் - இவர் இரும்பு மனிதனா இல்லையா என்பதற்கு - இன்றல்ல,நேற்றல்ல, இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கான விளக்கத்தை, அவருடைய நடவடிக்கைகளின் மூலமாக நாட்டுக்குத் தருவார், என்னை நம்புங்கள் என்று நான் சொன்னேன்.
பேரைக் காப்பாற்றுவார்..
நான் சொன்னபடி, ஸ்டாலின், ஸ்டாலினாகவே உரு எடுத்திருக்கிறார். ஸ்டாலினாகவே நிர்வாகத்தை நடத்துவார், ஸ்டாலினாகவே நாட்டு மக்களுக்கு நல்லுதவிகளைச் செய்வார்.
ரஷ்யத் தலைவர்...
ஸ்டாலின் என்று நான் பெயர் சூட்டிய போது, என்னைக் கேட்டார்கள். என்ன, உங்கள் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள், ஸ்டாலின் என்றால் ரஷ்யாவின் தலைவராக இருந்தவர் அல்லவா?
மனதின் எண்ணங்கள்...
இது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே, மேடையிலே ஸ்டாலினை உட்கார வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறேன் என்று யாரும் கருதக் கூடாது. மனதிலே உள்ள எண்ணங்களை, நினைவுகளை நான் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது, எனவே அதை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறேன்.
அருமையான மகன்...
அத்தகைய அருமையான தம்பிமார்கள் பலரை நான் பெற்றிருந்தாலுங்கூட, ஒரு மகனையும் அப்படிப் பெற்றிருக்கிறேன் என்பதிலே எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.
திமுக.,வை வலுப்படுத்துங்கள்...
இந்த இயக்கத்தை மேலும் வளர்க்க, வலுப்படுத்து வந்து சேர்ந்திருக்கின்ற ஐநூறு பேரோ, ஆறுநூறு பேரோ போதாது, இன்னும் அதிகம் பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வலுப்படுத்த வர வேண்டும்.அப்படி வருகின்றவர்களை யெல்லாம் வருக, வருக என்று நான் வரவேற்கின்றேன். தமிழகத்தில் இனிமேல் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் - நம்மை, நம்முடைய தமிழர்களை, திராவிடப் பெருங்குடி மக்களை ஒற்றுமைப்படுத்திக் காப்பாற்றக் கூடிய இயக்கத்தைக் காண முடியாது.
நமக்கு நாமே...
ஸ்டாலின் நடத்திய சுற்றுப்பயணத்திற்கு தலைப்பு "நமக்கு நாமே"என்றிருந்தாலும், இது நமக்காக அல்ல, நமக்கு என்பது நமக்காக என்று விரிந்தாலும் அந்த நமக்காக செய்யப்படுகின்ற காரியங்கள் - திராவிட மக்களுக்காக நாம் ஆற்றுகின்ற பணிகள் - திராவிடச் சமுதாயத்திற்காக நாம் ஆற்றுகின்ற பணிகள்.
திராவிட இயக்கம்...
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூரிலே திராவிட இயக்கக் கொடியை கையிலே எடுத்தவன் இன்னும் அதை கீழே வைக்கவில்லை. தி.மு.க. என்பது வெறும் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இயக்க மல்ல. தி.மு. க. என்பது திராவிடத்தை முன்னேற்றுவதற்காக அமைக்கப்பட்ட இயக்கம். திராவிட நாட்டுடைய கொள்கைகளுக்கு, பாடுபடக் கூடிய ஒரே ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்' என இவ்வாறு கருணாநிதி பேசினார்.