அதிமுக ஆட்சியை மாற்றுங்கள்!… ஈரோடு மக்களிடம் வலியுறுத்திய ஸ்டாலின்!!
ஈரோடு: எங்களிடம் குறைகளைக்கூற முன்வந்ததுபோல், அதிமுக ஆட்சியை மாற்றவும் முன்வர வேண்டும் என்று ஈரோட்டில் பேசிய ஸ்டாலின் கூறியுள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் இன்று காலை பவானிசாகர் அணையில் கண்காணிப்பு பாதை மாடத்திற்கு சென்று அணையை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அணையை ஒட்டி வாழும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர்கள், மீன்பிடி சந்தையில்லாமல் பெரிதும் அல்லல்படுவதாகவும், இந்த பகுதியில் சமூக நலக்கூடம், அங்கன்வாடி மையம், அங்கீகரிக்கப்பட்ட மயானங்கள் கூட இல்லை என்று வேதனை தெரிவித்தனர்.
பவானி சாகர் அணையில்
மீனவர்களிடம் பேசிய ஸ்டாலின், பவானிசாகர் அணையில் சாயக்கழிவு நீர் கலப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கெட்டுப்போயிள்ளதாக கூறினார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சாயக்கழிவுகள் எல்லாம் கலப்பதில்லை என சட்டப்பேரவையில் தவறான தகவல்களை தந்துள்ளார்.
ஆட்சி மாற்றம் வேண்டும்
உங்கள் அடிப்படை வசதிகளைக்கூட செய்துதரமுடியாத நிலையில் ஏன் அந்த அரசை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைகளைக்கூற முன்வந்ததுபோல், ஆட்சியை மாற்றவும் முன்வர வேண்டும் என்றும் அவர்களிடத்தில் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இஸ்லாமியர்களிடம் பேச்சு
பின்னர், சந்தியமங்கலத்தில் மசூதி வழியே சென்ற அவரை இஸ்லாமியர்கள் வரவேற்று குறைகளைக் கூறினர். அவர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
மஞ்சள் விவசாயிகள்
பின்னர் அங்கிருந்து அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட, பங்களா புதூருக்குச் சென்று மஞ்சள் தோட்டத்தில் மஞ்சள் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய விவசாயிகள், மஞ்சள் தரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அதிமுக அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினர்.
வாழ்வாதாராத்தைக் திமுக காக்கும்
விவசாயிகளுக்குப் பதிலளித்து பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். எந்த நிலையிலும் உங்களின் வாழ்வாதாரத்தை திமுக காக்கும் என்று உறுதி அளித்தார்.
மகளிர் சுய உதவி குழுக்கள்
கோபியில் மகளிர் சுய உதவிக் குழு மகளிருடன் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவர், மகளிர் சுய உதவிக் குழு பெண்களுடன் திமுக அன்போடு இருக்கிறது என்று கூறினார். அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.