மு.க. ஸ்டாலின் ராஜதந்திரியல்ல; முட்டாள் என்றும் சொல்லமாட்டேன்: வைகோ
புதுக்கோட்டை: திமுகவிற்கு வைகோ வந்தாலும் கருணாநிதி மன்னிப்பார் என்று ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார், அதை வைத்து போகுமிடங்களில் எல்லாம் வைகோ, தனது குமுறலை வெளிப்படுத்தி வருகிறார். கருணாநிதியைப் போல ஸ்டாலின் ராஜதந்திரியில்லை என்று கூறியதோடு, அதற்காக அவரை முட்டாள் என்றும் கூறமாட்டேன் என்று போட்டு தாக்கியுள்ளார் வைகோ.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், கடந்த 7ம் தேதி முதல் முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். போகுமிடங்களில் எல்லாம் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திமுக, அதிமுகவிற்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பகலில் தொடங்கும் பிரச்சாரம் நள்ளிரவு வரையும் நீடிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்க 4 கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணி தொடங்கப்பட்டது. சட்டசபை தேர்தலுக்கு உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க. தவிர மற்ற கட்சிகள் சேரலாம். கூட்டணிக்கு வரும் கட்சிகளை பரந்த மனதோடு வரவேற்கிறோம் என்றார்.
மநகூவை உடைக்க சதி
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் நலக்கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று கூறிய வைகோ, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல்வாதிகள், ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். மதுக்கடைகள் மூடப்படும். தமிழர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். தமிழர்களை வஞ்சிக்கும் மத்தியஅரசுக்கு எதிராக போராடுவோம். மக்கள் நலக்கூட்டணியை உடைக்க சில கட்சிகள் சதி செய்கின்றன. மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததுபோல செய்திகளை பரப்புகின்றன என்றார்.
வாசனுக்கு நன்றி
எங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என நாங்கள் விரும்பும், இதுவரை இடம்பெறாத த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதாக அறிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் எங்களின் ஒற்றுமை வெளி உலகிற்கு புரியும். எங்களின் ஒற்றுமை குறித்து அறிக்கை வெளியிட்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுதி பங்கீடு
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். கட்சிகள் எந்தெந்த தொகுதியை பிரித்துக் கொள்வது என்பது குறித்து பின்னர் முடிவு செய்து அறிவிப்போம். 4 கட்சிகளை சேர்ந்தவர்களில், யார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அது மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்தான் என்பதை மனதில் வைத்து தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் வைகோ கூறியுள்ளார்.
மாட்டுச்சந்தை பேரம்
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, "இந்த கூட்டணி அரசியலில் நேர்மை, வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது மாட்டுச்சந்தை பேரம் போன்று ஆகிவிட்டது. அரசியலை வியாபாரப் பொருள் ஆக்கிவிட்டனர். தமிழகத்தில் வெளிப்படையான அரசியல் இல்லை. இந்த தேர்தலில் இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும்" என்றார்.
மாற்று அரசியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, "தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முதல் கூட்டணி அமைத்ததும் நாங்கள்தான். அ.தி.மு.க., தி.மு.க.விற்கு எதிரான மாற்று அரசியலை முன்வைத்து கலந்து பேசி உருவாக்கப்பட்டதுதான் இந்த கூட்டணி. இந்த கூட்டணியின் செயல்திட்டங்களை தொண்டர்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். மக்கள் நலக்கூட்டணி தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை வீழ்த்தப் போவது உறுதி என்று கூறினார்.
மக்கள் பிரச்சினைக்கு தீர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, இது தொகுதி பங்கீடு செய்துகொள்ளும் கூட்டணி கிடையாது. மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிவகங்கையில் பொதுக்கூட்டம்
இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஒரு சில கட்சிகள் தங்கள் கதவு திறந்து இருக்கிறது என கூறி ஏதோ சந்தையில் காய்கறிகளை விற்பதை போல் அழைத்து கொண்டிருப்பதாக புகார் தெரிவித்தார்.
கொள்கை இருக்கிறதா?
தங்கள் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள், கோட்பாடுகள் இருக்கலாம். ஆனால் தற்போது கொள்கை அடிப்படையில் நான்கு கட்சிகளும் இணைந்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் மற்ற கட்சிகளுக்கு கொள்கைகள் இருக்கின்றதா? என்று கேட்டார் திருமாவளவன்.
வியாபாரமான கல்வி
திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள் என்றும், இந்த கட்சிகளால் கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டதாகவும் வேதனை தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
மு.க.ஸ்டாலின் முட்டாளா?
கடைசியாக மைக் பிடித்த வைகோ, மு.க.ஸ்டாலினுக்கு அவரது தந்தையைப் போல் ராஜதந்திரம் தெரியாது என்றும், அதற்காக அவரை நான் வேறு மாதிரியாக அழைப்பதாக எண்ணிவிட வேண்டாம் என்றும், மு.க.ஸ்டாலினை முட்டாள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.